லெபனான் குரங்கம்மை தொற்று நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் நேற்று திங்கட்கிழமை அடையாளம் காணப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட நோயாளி வெளிநாட்டில் இருந்து வந்தவர். அவர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன், அவரது நெருங்கிய தொடர்புகளைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுவாக கடந்த காலங்களில் குரங்கம்மை நோய் பாதிப்பு மேற்கு, மத்திய ஆப்பிரிக்காவில் மட்டுமே கண்டறியப்பட்டது.
ஆனால் கடந்த சில மாதங்களாக அவை ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய பகுதிகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 42 நாடுகளில் 2,100-க்கும் மேற்பட்ட குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனினும் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே குரங்கம்மை தொடர்பில் உச்சவிழிப்பு நிலையை அறிவிக்க வேண்டுமா? என்பது குறித்து ஜூன் 23ஆம் திகதி முடிவு எடுக்கப்படும் எனவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.