ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட டிக்கோயா தரவளை கீழ்ப் பிரிவு தோட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 12 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் நான்கு வீடுகள் தீயினால் பகுதியளவில் எரிந்து நாசமாகியுள்ளன.
இந்த நான்கு வீ்டுகளிலும் இருந்த 20 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்கவைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தீ விபத்தின்போது எவருக்கும் தீக்காயங்கள் ஏற்படவில்லை. எனினும், வீடுகளிலுள்ள சில பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
தீ ஏற்பட்டபோது வீட்டில் இருந்தவர்கள் எரிவதைக் கண்டு கூச்சலிட்டனர். உடனே அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதேவேளை, இது தொடர்பாக ஹட்டன் பொலிஸ் நிலையத்துக்குப் பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டது. அதன்பின் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களைக் கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை நோர்வூட் பிரதேச சபை தவிசாளரும், ஹட்டன் - டிக்கோயா நகர சபை உறுப்பினர் எஸ்.ரட்ணகுமாரும் இணைந்து வழங்கியுள்ளனர்.