திஸ்ஸமஹாராம அக்குருகொடதில்லிய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவரைப் பார்க்கச் சென்ற போது மனைவியும் அவரது மகளும் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (23) மாலை 5.00 மணியளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாயும் மகளும் முச்சக்கரவண்டியில் பயணித்த போது சபாரி ஜீப்பில் வந்த இருவர் முச்சக்கரவண்டியை நிறுத்தி தாயையும் மகளையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் அவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
54 வயதான தாயும் 34 வயதான மகளும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாயின் வலது கை துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மகளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சந்தேகநபர்கள் கடந்த 20ஆம் திகதி குறித்த 54 வயதான பெண்ணின் கணவரை வீட்டிற்கு வந்து கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.