இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும், இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் இன்றைய போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 43.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்நிலையில், 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 39.3 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.அணிசார்பில் அதிகபடியாக அலெக்ஸ் கேரி 45 ஓட்டங்களையும், மார்னஸ் லாபுசாக்னே 31 ஓட்டங்களையும், மிட்செல் மார்ஷ் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் மகீஷ் தீக்ஷன 26 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், துனித் வெல்லாலகே 42 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக விக்கெட்டுக்களை பெற்ற நபராகவும் துனித் வெல்லாலகே பதியப்பட்டுள்ளார்.
இதன்படி, இலங்கை அணி 3 - 2 என்ற அடிப்படையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியுள்ளது.
அத்துடன், இவ்விரு அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரை 2 -1 என்ற அடிப்படையில் அவுஸ்திரேலிய அணி வென்றிருந்தது.
இதேவேளை, அவுஸ்திரேலிய அணி மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Category: விளையாட்டு, புதிது
Tags: ஆஸ்திரேலியா, இலங்கை