அமெரிக்கா - டெக்சாஸ் மாகாணம், சான் அன்டோனியோவின் புறநகரில் கைவிடப்பட்ட சரக்கு கொள்கலன் லொறி ஒன்றுக்குள் இருந்து 46 பேர் சடலங்காக மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்து வேறு இடத்திற்கு நகர முயன்றவர்கள் என நம்பப்படுகிறது.
ஆட்கடத்தல்காரர்களால் இவர்கள் சரக்கு கொள்கலனில் ஏற்றி கடத்தப்பட்ட நிலையில் வெப்ப அதிர்ச்சி (Heat Stroke) மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொள்கலன் லொறிக்குள் இருந்த நான்கு குழந்தைகள் உட்பட 16 பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சான் அன்டோனியோ தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உயிர் பிழைத்தவர்கள் உடல்கள் மிகவும் சூடான நிலையில் இருந்தன. அவர்கள் வெப்ப அதிர்ச்சி (Heat Stroke) மற்றும் வெப்ப சோர்வு ஆகியவற்றால் அவதிப்பட்டனர் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் இருந்து 250கி.மீ தொலைவிலுள்ள சான் அன்டோனியோ, ஆட்கடத்தல்காரர்களுக்கான முக்கியமான போக்குவரத்துப் பாதையாக உள்ளது.
ஆட்கடத்தல்காரர்கள், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் அமெரிக்க எல்லைக்குள் நுழைந்த பிறகு, அவர்களை தொலைதூரப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல இவ்வாறான சரக்கு கொள்கலன் லொறிகள் பயன்படுத்தப்படுகின்றன.
உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் இறந்தவர்களைப் பற்றிய தகவலறிந்த கிடைத்தன. இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்ததாக சான் அன்டோனியோ தீயணைப்புப் பிரிவின் தலைவர் சார்லஸ் ஹூட் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஒரு லொரியைத் திறக்கும்போது அதற்குள் இத்தழன இறந்த உடல்களை பார்த்தது அதிர்ச்சியளித்தது என சார்லஸ் ஹூட் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த சரக்கு கொள்கலன் லொறியில் சாரதி தப்பியோடியுள்ளார். லொறிக்குள் குளிரூட்டும் வசதியில்லை. அதற்குள் குடிநீர் கூட இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.