கனடா - பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் - வான்கூவர் தீவில் உள்ள வங்கி ஒன்றுக்குள் புகுந்த ஆயுததாரிகள் இருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆயுததாரிகளுடன் இடம்பெற்ற மோதலில் பொலிஸார் 6 பேர் காயமடைந்தனர்.
வான்கூவர் - சானிச் நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்குள்ளேயே செவ்வாய்க்கிழமை ஆயுததாரிகள் நுழைந்தனர். இதன்போது அங்கு ஏராளமான வாடிக்கையாளர்களும் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வங்கிக்குள் ஆயுததாரிகள் புகுந்த தகவல் கிடைத்ததும் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் வங்கியை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் வங்கிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த ஆயுததாரிகளை சரணடையுமாறு எச்சரித்தனர்.
எனினும் சரணடைய மறுத்த ஆயுததாரிகள் பொலிஸாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பொலிஸாரும் அவர்களை நோக்கிச் கூட்டனர். இரு தரப்பிலும் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
பல மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையைத் தொடர்ந்து வங்கிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த 2 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மோதலில் காயமடைந்த பொலிஸார் 6 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆயுததாரிகள் வந்த காரை பொலிஸார் பரிசோதனை செய்தபோது அதில் வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. இதனால் பதற்றம் உருவானது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்கி அருகே வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த வெடிகுண்டு செயலிழக்க வைக்கப்பட்டது.
வங்கிக்குள் புகுந்த கவச உடை அணிந்திருந்த 2 பேர், அதிக ஆயுதங்களை வைத்திருந்தனர். பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நிகழ்வதற்குள் அவர்கள் கொல்லப்பட்டனர் என வான்கூவர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சுட்டுக்கொல்லப்பட்ட ஆயுததாரிகள் குறித்த எந்த தகவலையும் பொலிஸார் வெளியிடவில்லை. அவர்கள் வங்கியில் கொள்ளையடிக்கும் நோக்கில் புகுந்தார்களா? அல்லது தீவிரவாத தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் நுழைந்தார்களா? என்கிற பல்வேறு கோணங்களில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Category: உலகம், புதிது
Tags: கனடா, பிரிட்டிசு கொலம்பியா