சுவிடன் மற்றும் பின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு எதிரான தனது நிலைப்பாட்டை கைவிடுவதாக துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் அறிவித்துள்ளார்.
இதனால் சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகளும் நேட்டோவில் இணைவதில் துருக்கி போட்டு வந்த முட்டுக்கட்டை நீங்கியுள்ளது.
நேட்டோ உறுப்பு நாடுகளாக சுவீடன் மற்றும் பின்லாந்து இணைவதற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில், ஸ்பெயின் - மேட்ரிட் நகரில் நேற்று நடந்த தலைவர்களுடனான கூட்டத்தில், நேட்டோவில் இவ்விரு நாடுகளும் இணைவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் தொடர்புடைய நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, துருக்கி தனது எதிர்ப்பு நிலைப்பாட்டை கைவிட்டது. இதனை துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் வெளியிட்டார்.
இதனால், நேட்டோ உறுப்பினர்களாக சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகள் இணைவதில் இருந்த துருக்கியின் எதிர்ப்பு விலகியது. இதற்கான முத்தரப்பு நாடுகளுடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இவ்வாறான நிலையில் சுவிடன், பின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு இதுவரை இருந்துவரை தடை நீங்கியதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரவேற்றார்.
துருக்கி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதற்காக பைடன் பாராட்டு தெரிவித்தார்.
சுவிடன் மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகளும் தகுதி வாய்ந்த இராணுவங்களை கொண்ட வலிமையான ஜனநாயக நாடுகள். அவர்கள் நேட்டோவின் உறுப்பினராவது அதன் கூட்டு பாதுகாப்புக்கு வலிமை சேர்க்கும். நேட்டோ உறுப்புரிமை தொடர்பில் சுவிடன், பின்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மேற்கொண்ட முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு வாழ்த்துகள் எனவும் பைடன் கூறியுள்ளார்.