நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு ரஷ்யா நேரடி அச்சுறுத்தலாக உள்ளதாக 30 உறுப்பு நாடுகளைக் கொண்ட நேட்டோ கூட்டணி கூட்டுப் பிரகடனம் செய்துள்ளது.
ஸ்பெயின் - தலைநகா் மாட்ரிட்டில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்ற இந்த உச்சிமாநாட்டில் நேட்டோ உறுப்பு நாடுகளின் முக்கிய மற்றும் நேரடி அச்சுறுத்தலாக ரஷ்யா உள்ளதாக ஏகமனதாக பிரகடனம் செய்யப்பட்டது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரால் இரண்டாம் உலகப் போர் மற்றும் பனிப் போருக்குப் பின்னர் ஐரோப்பிய பிராந்தியத்துக்கு கடும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போரிடுவதற்காக உக்ரைனுக்கு அரசியல் ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் அளித்து வரும் உதவிகளை அதிகரிக்க உறுப்பு நாடுகளின் தலைவர்கள் உறுதிபூண்டனர்.
முன்னதாக, காணொளி மூலம் நேட்டோ உச்சிமாநாட்டில் பேசிய உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷியப் படையெடுப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தங்கள் நாட்டுக்கு நேட்டோ நாடுகள் முழுமையாக உதவி அளிக்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்தார்.
ரஷ்யாவைத் தோற்கடிப்பதற்காக நேட்டோ உறுப்பு நாடுகள் எங்களுக்கு அதிநவீன ஆயுத-தளபாட உதவிகளை வழங்க வேண்டும் எனவும் ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்தார்.