உக்ரைனின் கருங்கடல் துறைமுகமான ஒடேசாவுக்கு அருகிலுள்ள அடுக்குமாடி கட்டடம் மற்றும் ஓய்வு விடுதி மீது ரஷ்யா இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர். மேலும் டசின் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் கிழக்கு தொழில்துறை பகுதியான டான்பாஸில் ரஷ்யா தனது படைகளைக் குவித்துள்ளது. அத்துடன், ரஷ்யா கடந்த இரண்டு வாரங்களாக இந்தப் பகுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை இரட்டிப்பாக்கியுள்ளது.
துல்லியமற்ற சோவியத் கால ஏவுகணைகளை பாதிக்கும் மேற்பட்ட தாக்குதல்களுக்கு ரஷ்யா பயன்படுத்தியதாக உக்ரேன் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஒரு ஏவுகணை அதிகாலை 1 மணியளவில் பில்ஹோரோட்-டினிஸ்ட்ரோவ்ஸ்கி நகரில் உள்ள ஒன்பது மாடி கட்டிடத்தை தாக்கியதாக உக்ரேனிய அவசரகால அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் அந்தக் கட்டடத்தில் தீ பரவல் ஏற்பட்டது.
கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சிலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்குண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன என ஒடேசா பிராந்திய நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் செர்ஹி பிராச்சுக் (Serhiy Bratchuk) உக்ரேனிய அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.
மற்றொரு ஏவுகணை ஓய்வு விடுதியைத் தாக்கியது. இதில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார் என்று பிராட்சுக் கூறினார்.
இதேவேளை, மத்திய உக்ரைன் கிரெமென்சுக் நகரில் (Kremenchuk) உள்ள வணிக வளாகம் மீது ரஷ்யா கடந்த திங்கட்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 59 பேர் காயமடைந்தனர்.
பரபரப்பான வணிக வளாகம் மீது திங்கட்கிழமை இரண்டு ரஷ்ய ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன. இதன்போது வணிக வளாகத்தில் 1,000 க்கும் மேற்பட்டோர் இருந்ததாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.
ரஷ்யாவிடமிருந்து கண்ணியம் மற்றும் மனித நேயத்தை எதிர்பார்ப்பது பயனற்றது என்பதை அப்பாவிகள் மீதான இந்தத் தாக்குதல் காட்டுவதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.