தெற்கு ஈரானில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 3 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 8 -க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் வளைகுடா கடற்கரை பகுதியில் உள்ள ஹர்மொஸ்கன் மகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியிருச்ததாக ஈரான் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
நில நடுக்கத்தால் இந்தப் பகுதியில் பல கட்டங்கள் இடிந்து விழுந்தன. இப்போது வரை மூன்று பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. எட்டு பேர் காயமடைந்துள்ளனர் என ஹர்மொஸ்கன் மாகாண அவசரகால நிர்வாகத்தின் தலைவர் மெஹ்ர்தாத் ஹசன்சாதே அரச தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.
இந்த நிலநடுக்கத்தின் மையம் 10 கி.மீ. ஆழத்தில் இருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் பல பேரழிவு தரும் நிலநடுக்கங்களை ஈரான் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.