அமெரிக்கா - டெக்சாஸ் மாகாணம், சான் அன்டோனியோவின் புறநகரில் கைவிடப்பட்ட சரக்கு கொள்கலன் லொறி ஒன்றுக்குள் இருந்து 46 பேர் சடலங்காக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த துயர சம்பவத்திற்கான காரணங்களை கைது செய்யப்பட்டுள்ள இந்த வாகனத்தின் சாரதி ஒருவர் வெளியிட்டுள்ளார்.
கொல்கலன் லொறியில் வாயு சீராக்கி ( air conditioner) செயலிழந்ததால் வெப்ப அதிர்ச்சி (Heat Stroke) காரணமாகவே 53 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் புலம்பெயர்ந்தவர்களை மறைத்துக் கடத்திச் சென்ற கொள்கலன் லொறியில் வாயு சீராக்கி செலலிழந்தது தனக்குத் தெரியாது என அந்த வாகனத்தின் ஓட்டுநர் தெரிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டு ஆவணங்களின்படி, ஹோமரோ ஜமோரானோ என்ற அந்த சாரதி இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார். அவர் சடலங்களுடன் கைவிடப்பட்ட சரக்கு லொறிக்கு அருகே ஓரிடத்தில் மறைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க வரலாற்றில் மிகக் கொடிய மனித கடத்தல் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் ஹோமரோ ஜமோரானோவும் ஒருவர்.
வாகனத்தில் இருந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட பல குழந்தைகள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெக்சாஸ் மாகாணம், சான் அன்டோனியோவின் புறநகரில் கைவிடப்பட்ட சரக்கு கொள்கலன் லொறி ஒன்றுக்குள் இருந்து கடந்த திங்கட்கிழமை 53 பேர் சடலங்காக மீட்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்து வேறு இடத்திற்கு நகர முயன்றவர்கள் என நம்பப்படுகிறது.
ஆட்கடத்தல்காரர்களால் இவர்கள் சடக்கு கொள்கலனில் ஏற்றி கடத்தப்பட்ட நிலையில் வெப்ப அதிர்ச்சி (Heat Stroke) மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக இவர்கள் உயிரிழந்திருந்தமை தெரியவந்தது.
இந்தக் கொள்கலன் லொறிக்குள் இருந்த நான்கு குழந்தைகள் உட்பட 16 பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சான் அன்டோனியோ தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உயிர் பிழைத்தவர்கள் உடல்கள் மிகவும் சூடான நிலையில் இருந்தன. அவர்கள் வெப்ப அதிர்ச்சி (Heat Stroke) மற்றும் வெப்ப சோர்வு ஆகியவற்றால் அவதிப்பட்டனர் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் இருந்து 250கி.மீ தொலைவிலுள்ள சான் அன்டோனியோ, ஆட்கடத்தல்காரர்களுக்கான முக்கியமான போக்குவரத்துப் பாதையாக உள்ளது.
ஆட்கடத்தல்காரர்கள், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் அமெரிக்க எல்லைக்குள் நுழைந்த பிறகு, அவர்களை தொலைதூரப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல இவ்வாறான சரக்கு கொள்கலன் லொறிகள் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.