இராம பிரானால் வழிபட்ட ஆலயமாக கருதப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வண்ணக்கராக மீண்டும் விக்ரமன் தெரிவுசெய்யப்பட்டார்.
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வண்ணக்கர் தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று காலை இத் தேர்தலின் தெரிவத்தாட்சி அலுவலரும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளருமான வி.வாசுதேவன் முன்னிலையில் ஆலயத்தில் நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வண்ணக்கர் தெரிவுசெய்வதற்காக வாக்களிப்பதற்காக 1258பேர் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் 661வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன. 22வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.639வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக இருந்தன.
இதனடிப்படையில் வண்ணக்கர் தேர்வுக்கான போட்டியில் நந்தி சின்னத்தில் போட்டியிட்ட தி.விக்ரமன் அவர்கள் 551வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றதாக தேர்தலின் தெரிவத்தாட்சி அலுவலரும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளருமான வி.வாசுதேவன் அறிவித்தார்.
அத்துடன் வண்ணக்கர் தேர்தலில் போட்டியிட்ட மற்றைய வேட்பாளர் 63வாக்குகளைப்பெற்று இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டார்.உதவி வண்ணக்கர் தேர்தலில் மயில் சின்னத்தில் போட்டியிட்ட சுரேந்திரகுமார் அவர்கள் 451வாக்குகளைப்பெற்றதுடன் பிள்ளையார் சின்னத்தில் போட்டியிட்ட வெ.இளங்கோ அவர்கள் 188 வாக்குகளைப்பெற்றுள்ளார்.
இந்த தேர்தலில் வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் அவர்களும் உதவி வண்ணக்கராக உ.சுரேந்திரன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலரும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளருமான வி.வாசுதேவன் தெரிவித்தார்.
தேர்தல் மூலம் மீண்டும் வண்ணக்கராக,உதவி வண்ணக்கராக தெரிவுசெய்யப்பட்டவர்களும் அதிசைவ வேளாள குடி மக்களினால் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்ட வண்ணக்கர்மார்களும் இன்று மாலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளை முன்னெடுத்ததுடன் தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு