மத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்திற்கு அடை மழை பெய்து வருகிறது.
நீர் போசன பிரதேசங்களில் பதிவாகிவரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகின்றன.
காசல் நீர்த்தேகத்திற்கு நீர் போசன பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற அதிக மழை வீழ்ச்சி காரணமாக இன்று (06) முதல் நீர்த்தேக்கத்தில் உள்ள அனைத்து கதவுகளிலும் வான் பாய்ந்து வருகின்றன.
குறித்த நீர்த்தேக்கத்தில் நீரினை அதிகரிப்பதற்காக அமெரிக்க தொழிநுட்பத்தில் கடந்த காலங்களில் பலூன் கதவுகள் பொறுத்தப்பட்டன. குறித்த நான்கு அடி உயரம் கொண்ட பலூன் கதவுகளுக்கும் மேலாக நீர் வான் பாய்ந்து வருகின்றன.
இதே நேரம் தொடர்ச்சியாக நீரேந்தும் பிரதேசங்களுக்கு பெய்து வரும் கடும் மழை காரணமாக கெனியோன் மவுசாகலை, லக்ஸபான நவ லக்ஸபான, பொல்பிட்டிய மேல் கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்து வான் பாயும் அளவினை எட்டியுள்ளன.
மேல் கொத்மலை, கெனியோன் விமல சுரேந்திர லக்ஸபான உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் அடிக்கடி நீர் மட்டம் உயர்ந்து வான்கதவுகள் திறக்கப்படுவதாகவும் இதனால் நீர்த்தேக்கங்களுக்கு கீழ் வாழும் பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேநேரம் நுவரெலியா மாவட்டத்திற்கு பெய்து வரும் அடை மழை காரணமாக ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்து போக்குவரத்து பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
மண்சரிவு ஏற்பட்டுள்ள பல இடங்களில் ஒரு வழி போக்குவரத்தே காணப்படுகின்றன.
சில பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக தொலைபேசி கம்பங்கள் முறிந்து வீழ்ந்து தொலைத்தொடர்பு பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.