வடமாகாண இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் மாகாணம் தழுவிய சுகயீன விடுப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்கள்.
அதில்......
கடந்த சனிக்கிழமை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பணிமனையும் , பிரதேச செயலாளரின் உத்தியோக பூர்வ விடுதியும் சனிக்கிழமை நள்ளிரவு உத்தியோகபூர்வ அனுமதிகள் எதுவும் பெறப்படாமல் சோதனை செய்யப்பட்டது.
தேடுதலின் போது அலுவலக தேவைகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட எரிபொருள் எவருடைய அனுமதியும் இன்றி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.எம்.பி.ஆர்.கேரத் என்பவரால் எடுத்து செல்லப்பட்டது.
குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கோரி வடமாகாண இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் மாகாணம் தழுவிய சுகயீன விடுப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கின்றோம் என அவ் அறிக்கையில் தெரிவித்திருப்பதோடு ஏனைய தொழில் சங்கங்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பதோடு அன்றைய நாளில் பொதுமக்களுக்கு ஏற்படும் அசொகரியங்களை தவிர்க்கும் முகமாக பிரதேச செயலகங்கள் மற்றும் ஏனைய அலுவலகங்களுக்கு காலை 9 மணி தொடக்கம் 11 மணி வரை சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பதால் அவ் நேரங்களில் வருவதை தவிர்த்து அதன் பின்னர் தங்களின் பூரண சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.