காரைநகர் எரிபொருள் நிலையத்தின் உரிமையாளரின் உறவினர்களின் வீடுகள் தீக்கிரையான சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதால் தாம் தொடர்ந்தும் அச்ச நிலையில் வாழவேண்டியில் உள்ளதாக காரைநகர் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த சில நாட்களுக்கு முன்னர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வாளுடன் சென்ற நபர்கள் உரிமையாளர் உட்பட்டவர்களை மிரட்டிய நிலையில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இருந்த போதிலும் அவர்களில் ஒருவர் சில மணி நேரங்களிலேயே விடுதலையாகியிருந்தார்.
அன்று இரவு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளருக்கு நெருக்கமான இருவரின் வீடுகள் மீது தீ வைக்கப்பட்ட நிலையில் ஒரு வீடு முற்றாக எரிந்து அழிந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் மேற்கொள்ளப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இருந்தபோதிலும் இதுவரையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை. என்பதுடன், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இருவரும் தொலைபேசியில் விடியோ ஒன்றுக்காக தோன்றும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகின்றன. தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள காட்சிகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் தோற்றுவித்துள்ளன.
Category: செய்திகள், புதிது
Tags: யாழ்ப்பாணம்