இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் தமது பணிப்பாளர் சபை எப்போது அங்கீகாரம் வழங்கும் என நிச்சயமாகக் கூற முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
எனினும், கடன் வழங்குநர்களுடனான, கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையின் வெற்றியைப் பொறுத்து காலம் தீர்மானிக்கப்படும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியொருவர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் இலங்கை தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் நிக்கி ஏஷியா Nikkei Asia இணையத்தளத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கைக்கான கடன் தொடர்பில் விளக்கமளித்துள்ளனர்.
அதில், "கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு நேரம் எடுப்பதால், நிதியை வழங்கும் காலக்கெடுவை எதிர்வுகூறுவது மிகவும் கடினம். சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த வேண்டும். அப்போதுதான், எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து இலங்கை விரைவாக வெளியேற முடியும் என தெரிவித்துள்ளனர்.
நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியின் தரவுகளுக்கமைய, சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியவை இலங்கையின் முதன்மையான மூன்று இருதரப்பு கடன் வழங்குநர்களாக உள்ளனர். இலங்கை்கான மொத்தக் கடனில் சீனா 52%, ஜப்பான் 19.5% மற்றும் இந்தியா 12% என்ற வீதத்தில் வழங்கியுள்ளன.