இலங்கை உட்பட 42 நாடுகளில் உள்ள மக்கள் மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்ததற்காக பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாக ஒரு புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளரின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்ததற்காக தடுத்து வைத்தல் கட்டுப்படுத்தப்பட்ட சட்டத்தால் இலக்கு வைக்கப்படல் மற்றும் இணையங்கள் மூலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டனர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அத்துமீறல்கள் அனைத்தும் 2021 மே 1ஆம் திகதி முதல் 2022 ஏப்ரல் 30ஆம் திகதி வரையில் இடம்பெற்றுள்ளன.
இந்த செயற்பாடுகள் காரணமாக, குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் உள்ளவர்கள் ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைப்பதைத் தவிர்த்தனர் என்று ஐக்கிய நாடுகளின் அறிக்கை கூறியுள்ளது.
பழிவாங்கலுக்கு எதிராக உறுப்பு நாடுகளின் உறுதிமொழிகள் வழங்கப்பட்டபோதும் பொதுமக்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உதவி பொதுச் செயலாளர் இல்சே பிராண்ட்ஸ் கெஹ்ரிஸ் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகளுடனான ஒத்துழைப்பைத் தடுக்கும் வகையில் நீண்ட கால சிறைத்தண்டனை அல்லது வீட்டுக் காவலில் பலர் வைக்கப்பட்டுள்ளனர்.
பல நாடுகளில் தொடர்ச்சியான மற்றும் இதே போன்ற அச்சுறுத்தல் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
முன்னைய ஆண்டுகளைப் போலவே பழங்குடி மக்கள் சிறுபான்மையினர் அல்லது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறைகளுடன் பணிபுரிபவர்கள் அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கல்களுக்கு உள்ளாகின்றனர்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண்களையும், பெண் மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புபவர்களின் பாதுகாப்பை, உறுதிசெய்ய தொடர்ந்தும் ஐக்கிய நாடுகள் சபை பணியாற்றுவதாக பிராண்ட்ஸ் கெஹ்ரிஸ் ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையில் அறிக்கையை சமர்ப்பித்தபோது தெரிவித்துள்ளார்.