நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதியின் முதல் போட்டியில் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்விகண்டதன் மூலம் இந்திய அணியின் உலக்கிண்ணத்தைக் கைப்பற்றும் கனவு தகர்ந்துள்ளது.
உலகக்கிண்ணத் தொடர் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திவந்த இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்றிருந்தது.
புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் இருந்த நியூசிலாந்து அணியுடன் நேற்றுத் தொடங்கிய அரையிறுதியின் முதல்போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டி இன்று தொடர்ந்து நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி ஐம்பது ஓவர்களில் எட்டு விக்கெட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மூவரும் தலா ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்த நிலையில் மிக மோசமான நிலையினை எதிர்கொண்டிருந்த இந்திய அணியை சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜாவும் முன்னாள் அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனியும் நம்பிக்கையான நிலைக்கு இட்டுச்சென்றனர்.
இருவரும் ஆட்டம் இழந்த பின்னர் இந்திய ரசிகர்களின் நம்பிக்கை தகர்ந்தது. முடிவில் 49.3 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 221 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
ரவீந்திரஜடேஜா 59 பந்துகளை எதிர்கொண்டு 77 ஓட்டங்களைப் பெற்றார். மகேந்திர சிங் தோனி 72 பந்துகளை எதிர்கொண்டு 50 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்த நிலையில் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றும் அணியாக பரவலாக எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி தோல்வியுடன் தாயகம் திரும்புகிறது.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: