பெண் எம்.பி.களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் கூறிய இனவெறி கருத்துக்களுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி புதிய தீர்மானம் ஒன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
‘அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கு மட்டுமே’ என்ற ரீதியில் இனரீதியிலான கருத்துகளை வெளியிட்டு வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் ஜனநாயக கட்சி பெண் எம்.பி.க்கள் 4 பேர் மீது இனவெறி கருத்துக்களை கூறி டுவிட் செய்திருந்தார். அதில் அவர், ‘அமெரிக்க அரசை விமர்சிக்கும், முற்போக்கு சிந்தனையுள்ள ஜனநாயக கட்சி எம்.பி.க்கள், எந்த நாடுகளிலிருந்து வந்தார்களோ அங்கேயே செல்லலாம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதற்குதான் கடும் கண்டனங்கள் எழுந்தபடியே உள்ளன. முக்கியமாக அமெரிக்காவிலும் அவரது கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து பிரதமர் தெரேசா மேவும் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் டிரம்பிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் 240 பிரதிநிதிகள் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக வாக்களித்திருந்தனர். இதில் டிரம்ப் சார்ந்துள்ள கட்சியை சேர்ந்தவர்களும் எதிர்த்து வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.