யுத்த காலத்தில் எந்தளவிற்கு நாம் சினேகபூர்வமாக இங்கு இருந்தோமோ அதேபோன்று சினேகபூர்வமாக இருக்கவேண்டும் என வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் தற்கால அரசியல் நிலைமைகள் மற்றும் வன்னியிலும் இனவாத கருத்துக்கள் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாலேயே வெளியிடப்பட்டு வருவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் சிலர் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் இனவாத கருத்துக்களை தெரிவிக்கின்றனரா? அவ்வாறு கதைப்பவர்கள் பதிவு செய்யப்பட்ட கட்சியினரா? ஒன்றுமே பதிவு இல்லாதவர்களே.
அதற்குமப்பால் அவர்கள் தமது சொந்த கட்சியில் சின்னத்தில் போட்டியிடக்கூடியவர்களா? அவ்வாறு போட்டியிட முடியாதவர்களாகவே உள்ளனர். அவர்கள் தான் அண்மையில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். அதில் எத்தனை மக்கள் கலந்துகொண்டிருந்தார்கள்? யுத்த காலத்தில் எந்தளவிற்கு நாம் சினேகபூர்வமாக இங்கு இருந்தோமோ அதேபோன்ற சினேகபூர்வமாக இருக்கவேண்டும் என்பதில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மக்கள் மிகத்தெளிவாக இருக்கின்றனர். அவ்வாறான நிலையை அரசியல் வியாபாரிகளக உள்ளவர்கள் சிதைக்கப்பார்க்கின்றனர். அதன் பின்னணியில் சில முஸ்லீம் அரசியலவாதிகள் இருப்பதாக அறிய முடிகின்றது.
சில விடயங்களில் பினாமி என்ற செயற்பாடு இருக்கின்றது. ஆனால் வன்னியில் அரசியலிலும் பினாமிகளாக சிலர் செயற்படுவது ஆச்சரியமான செயல். அவர்களுக்கு தேர்தல் காலங்களில் மக்கள் தகுந்த பாடம் வழங்குவார்கள் என தெரிவித்தார்.