வவுனியா பூந்தோட்டத்தில் வெளிநாட்டு அகதிகள் தங்கியிருக்கும் நலன்புரி நிலையத்திற்கு அயலில் உள்ள கிராம மக்களுக்கு வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் நுளம்பு வலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது மழை இல்லாத காலத்தில் நுளம்பு வலைகள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு குடும்பத்திற்கு இரண்டு முதல் மூன்று நுளம்பு வலைகளை கடந்த இரண்டு தினங்களாக வழங்கி வருகின்றனர். இதனால் அப்பகுதியிலுள்ளவர்களுக்கு சந்தேகங்கள் அதிகரித்துக்காணப்படுகின்றது.
நோய் தாக்கத்திற்குள்ளானவர்களையா எமது பகுதிகளில் கொண்டு வந்து தங்க வைத்துள்ளனர். இதனால் நாங்களும் இவர்களுடன் சேர்ந்து இனந்தெரியாத நோய்த்தாக்கத்திற்குள்ளாக வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுகின்றாகவும் அயலிலுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் நோய்த்தாக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே இவர்கள் அனைவரும் தத்தமது நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளதாக மேலும் அயல் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டுக்குறித்து வவுனியா பிராந்திய மலேரியா தடை இயக்க பொறுப்பதிகாரி வைத்தியர் பிரசாத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது
அவ்வாறான இனந்தெரியாத நோய்த் தொற்றுக்கள் எவையும் அவர்கள் மீது இனங்காணப்படவில்லை. எமது பரிசோதனைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. முகாம் பகுதியிலிருந்து 500 மீற்றர் சுற்றளவில் தங்கியுள்ளவர்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மலேரியா நோயைத் தடை செய்யும் நடவடிக்கையாக இத்திட்டம் பல கிராமங்களில் இடம்பெற்று வருகின்றது. இதன் ஒரு அங்கமாகவே பூந்தோட்டம். ஸ்ரீநகர் பகுதிகளில் எம்மால் நுளம்பு வலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் இலங்கையிலிருந்து மலேரியாவை முற்றாக அழித்தொழிக்கும் நடவடிக்கையாகும். அடப்பன்குளம், எல்லப்பர்மருதங்குளம், நேரியகுளம் போன்ற பகுதிகளுக்கும் இவ்வாறு நுளம்பு வலைகள வழங்கப்பட்டு வருகின்றன.
இப்பகுதியில் இந்தியாவிலிருந்து வந்த தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். மலேரியா நோயை தடை செய்யும் நோக்குடன் செயற்பாடு இடம்பெற்று வருகின்றது என்று மேலும் தெரிவித்துள்ளார்.