கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய பெருங்கடலில் போத்தலில் அடைக்கப்பட்டு வீசப்பட்ட கடிதம் தற்போது ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ளது. இந்த கடிதத்தை கண்டெடுத்த சிறுவன் அதற்கு பதில் கடிதமும் எழுதி கடலில் வீசியுள்ள சுவாரஸ்ய சம்பவம்தான் இது.
ஐரே தீபகற்பத்தில் டாலியா என்ற கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் பால் என்பவரும், அவரது 9 வயது மகனான ஜியா எலியாத்தும் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது கடற்கரை மணலில் விளையாடிக் கொண்டிருந்த ஜியாவின் காலில் கண்ணாடி போத்தல் தட்டுப்பட்டுள்ளது. அதை கவனமாக மணலில் இருந்து அப்பா, மகன் இருவரும் எடுத்தனர்.
அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அது வெறும் போததல் அல்ல. அந்த போத்தலுக்குள் ஒரு கடிதம் சுருட்டிய நிலையில் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. பின்னர் அந்த போத்தலை உடைத்து கடிதத்தை படித்து பார்த்துள்ளார். அந்த கடிதம் 1969ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி அப்போது 13 வயதே ஆன பால் கில்மோரே என்பவர் எழுதியிருந்தது தெரியவந்தது.
இங்கிலாந்தில் இருந்து மெல்போர்ன் நகரத்திற்கு தான் குடிபெயர்ந்து செல்ல உள்ளதாகவும், ஆஸ்திரேலியா செல்லும் கப்பலில் இருந்து இந்த கடிதத்தை எழுதுவதாகவும் கில்மோரே தெரிவித்திருந்தார்.
மேலும் தனது கடிதத்திற்கு பதில் அனுப்பும் படியும் அவர் எழுதி இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மிகவும் சுவாரஸ்யமாக தனது தந்தையுடன் இந்த கடிதத்தை படித்த சிறுவன் எலியாத் கில்மோரே எங்கு இருக்கிறார் என்பதை அறியாமல் பதில் கடிதம் எழுதினான். அதனை ஒரு போத்தலில் அடைத்து கடலில் வீசினான். இதுகுறித்து தகவல்கள் தற்போது எலியாத் கண்டெடுத்த கடிதத்துடன் வைரலாகி வருகிறது.
இதற்கிடையில் 60 வயதை கடந்த கில்மோரே தற்போது பால்திக் கடல்பகுதியில் சொகுசு கப்பல் ஒன்றில் பயணித்து கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது