முல்லைத்தீவு மாவட்டம் செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணியில் பிக்குவின் சடலம் எரிக்கப்பட்டிருந்த நிலையில் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் இன்று பிராயச்சித்தப் பூசைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
நீதிமன்றத் தீர்ப்பினையும் மீறி பிக்குவின் சடலம் ஆலய தீர்த்தக் கேணியில் எரிக்கப்பட்டிருந்த நிலையில் இந்து வழிபாட்டு மரபின் அடிப்படையில் ஆலய வளாகத்துக்குள் மரணம் நிகழ்ந்தாலோ சடலம் காணப்பட்டாலோ பிராயச்சித்த பூசைகள் செய்யப்பட்ட பின்னரே வழிபாடு ஆற்றப்படுகின்ற மரபு காணப்பட்டுவருகின்றது.
இதனால் பிக்குவின் சடலம் எரிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரையில் ஆலயத்தில் வழிபாடு இடம்பெற்றிருக்கவில்லை. இந்நிலையில் இன்று குருக்கள் தலைமையில் பிராயச்சித்தபூசைகள் இடம்பெறுகின்றன.
இதனிடையே பூசைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றபோது முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் அங்கு சென்று ஆலயத்தின் நிர்வாகிகளிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.