இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் என இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வொஷிங்டனில் வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையே பொதுவான மற்றும் இராணுவ உறவு சிறப்பாக உள்ளது. எனினும் வர்த்தக உறவு திருப்தியானதாக இல்லை. இருதரப்பிலும் பல பிரச்சினைகள் உள்ளன.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சில வகை உருக்கு பொருட்கள், அலுமினிய பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்து வருகிறது. இந்நிலையில் அதிக வரிகளை தளர்த்த வேண்டும் என அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
அத்துடன், முன்னுரிமை வர்த்தக நாடு என்ற அடிப்படையில், ஜி.எஸ்.பி. சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் இந்தியா அமெரிக்காவிடம் வலியுறுத்தி வருகிறது எனவும் இந்திய நிதியமைச்சர் கூறினார்.
அதேநேரம் இந்தியாவில் தங்களது விவசாயம் மற்றும் மோட்டார் வாகனங்கள், பொறியியல் துறை பொருட்களுக்கு பெரிய அளவிலான சந்தை வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.
இந்த பிரச்சினைகள் தொடர்பாக இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
வொஷிங்டன் நகரில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தில் அமெரிக்க கருவூலத்துறை செயலாளர் ஸ்டீவன் முனுச்சினை சந்தித்துப் பேசினேன்.
நவம்பர் முதல் வாரத்தில் முனுச்சின் புதுடெல்லி விஜயம் செய்யவுள்ளார். இதன்போது இது குறித்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதென இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் என நம்புகிறேன் எனவும் இந்திய மத்திய நிதி அமைச்சர் தெரிவித்தார்.