தம்மால் எடுக்கப்பட்ட முயற்சியைச் சரியாக அணுகாது ஐந்து தமிழ்க் கட்சிகளும் தவறிழைத்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியப் பொது அறையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மாணவர் ஒன்றியம் இந்த இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளது.
ஐந்து தமிழ்க் கட்சிகளும் 13 அம்சக் கோரிக்கை அடங்கிய ஆவணத்தில் கையொப்பம் இட்டபோதும் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கான சரியான அணுகுமுறையை அவை கைக்கொள்ளவில்லை என்று மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
13 அம்சக் கோரிக்கையை ஜனாதிபதி வேட்பாளர்கள் நிராகரித்தால் ஜனாதிபதி தேர்தலில் என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்று இணங்கியிருந்தபோதும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
தமிழ் தலைமைகள் எம்மையும், தமிழ் மக்களையும் முட்டாள்கள் ஆக்கிய விட்டனர் என்று விசனித்துள்ள மாணவர் ஒன்றியம், தமிழ்க் கட்சிகள் கூடிப் பேசிக் கொண்டிருந்தபோது சி.வி.விக்னேஸ்வரன் முந்திக் கொண்டு அறிக்கை விட்டு அனைத்தையும் சிதறடித்து விட்டார் என்றும் தெரிவித்தது.
புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையும் வலுற்றது என்று யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள தமிழ்த் தலைமைகள், 5 தமிழ்க் கட்சிகளும் கூடிப் பேசியபோது 3 மாதங்களில் தீர்க்கக் கூடியன என்று பேசப்பட்ட விடயங்களை நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியது.
தமிழ்த் தலைமைகள் அவற்றை நிறைவேற்றத் தவறின் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் உரிய பதிலை வழங்குவார்கள் என்றும் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.