கிழக்கின் கல்வி வளர்ச்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களே தடையாக இருந்தனர் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் இன்று மட்டு. ஊடக அமையத்தில் ஊடகசந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த பூ.பிரசாந்தன்,
கிழக்குத் தமிழர்களின் கல்வி இருப்பில் கடந்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களே தடையாக இருந்ததை காணக்கூடியதாக இருக்கின்றது.
கல்குடா கல்விவலயப் பணிப்பாளருக்கு 83 பாடசாலை அதிபர்கள் ஆதரவாக கையெப்பமிட்டு அனுப்பியுள்ளனர் அவர் ஒரு சிறந்த வலயக்கல்விப்பணிப்பாளர் என்று.
தற்போது அவருக்கு இடமாற்றம் வழங்க கடந்த அரசியல் காலம் போல் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில் மக்களின் வாக்குகளைப்பெற்று சேவை செய்ய வேண்டியவர்கள் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் செயற்படுகின்றார்.
பாராளுமன்றம் சென்றால் பிள்ளையானைப்பற்றி பேசுவதுதான் அவரின் வேலை. மக்கள் வாக்களிப்பது இதற்காக இல்லை.
மட்டக்களப்பிற்கு வரும் நிதி ஒதுக்கீடுகளை வேண்டுமென்றே திருப்பிஅனுப்புவதும், இவ்வாறான கூட்டமைப்பின் செயலை எதிர்க்கும் அரச அதிகாரிகளுக்கு இடமாற்றம் பெற்றுப்கொடுப்பதும் பதவி உயர்வைத்தடுப்பதும் இவர்களின் வேலையாக உள்ளது.
கிழக்கு மாகாண கல்விவலயத்தில் அக்கறை இல்லாமல் கல்வியையும் குழிதோண்டிப்புதைத்துவிட்டு அதிகாரிகளையும் இடமாற்றம் செய்துவிட்டு, தமிழ் தேசியம் பேசுகின்ற அரசியல்வாதிகள் இனியாவது திருந்திக்கொள்ளவேண்டும்.
சுமந்திரன் அவர்கள் தன்னுடன் அனைத்துக்கட்சிகளும் ஒன்றினைந்து வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் தனது கட்சியில் ஒன்றாக சேர வேண்டும் என்று கேட்கின்றாறே தவிர அனைவரும் ஒரே குடையின் கீழ் வரவேண்டும் என குறிப்பிடவில்லை.
மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் மீது செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் ஏறாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள்,முகநூல்கள் ஊடாக அறியக்கூடியதாக இருந்தது. கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்று கூறிக்கொண்டு ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்துள்ளது.
தமிழ் மக்களுக்கு இன்று மிஞ்சியிருப்பது கல்வி மட்டுமே. தமிழர்கள் அறிவாயுதம் ஏந்த வேண்டும் என்று கூறிக்கொண்டு தமிழ் மக்களின் கல்வியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு குழிதோண்டி புதைத்துள்ளது.- என்றார்.