கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பத்தன்மோட்டை பகுதியில் 40 போத்தலிற்கு அதிக கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கண்டாவளை கிராம சேவையாளரின் அதிரடி நடவடிக்கையில் குறித்த பகுதியில் கசிப்பு விற்பனையில் தொடர்ச்சியாக ஈடுபட்ட சந்தேக நபர்களும், அவர்களிடமிருந்து கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 40 போத்தலிற்கு அதிக கசிப்பு மீட்கப்பட்டுள்ளதுடன், அதனை விற்பனை செய்து வந்ததாக தெரிவித்த சந்தேக நபர்கள் இருவரும் கிராம சேவையாளரினால் கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் வயல் மற்றும் வாய்க்கால் பகுதிகளில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட கசிப்பினை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்த நிலையிலேயே கிராம சேவையாளர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு கிராம மக்களின் உதவியுடன் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
சுமார் 9 மாதங்களிற்கு மேலாக குறித்த இரு சந்தேக நபர்களும் இவ்வாறு கசிப்பு விற்பனையில், ஈடுபட்டு வந்ததாகவும், தம்மை கைது செய்வது தொடர்பில் சவால் விட்டிருந்ததாகவும், இந்த நிலையில் இன்று குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கிராம சேவையாளரினால் கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கிராம சேவையாளரிற்கு இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கான அதிகாரம் காணப்பட்ட போதிலும், சட்டவிரோத செயற்பாட்டாளர்களின் அச்சுறுத்தலினால் சிலர் மௌனம் காத்து வருகின்றனர். இந்த நிலையில் குறித்த கிராமசேவையாளரின் துணிகர செயற்பாடானது அப்பிரதேசத்தில் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
கடந்த சில நாட்களிற்கு முன்னர் தட்டுவன்கொட்டி பகுதியில் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முனைந்தமைக்காக குறித்த கிராம சேவையாளரின் வீடு தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,