அவுஸ்திரேலியா - மெல்பேர்ன் அரச போக்குவரத்து வாகனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களிடம் திருடி வந்தவர்கள் என நம்பப்படும் 5 இலங்கையர்கள் மற்றும் இரு இந்தியர்கள் உள்ளிட்ட 7 பேர் மெல்பேர்ன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக மெல்பேர்னின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களிடம் பிக் பொக்கெட் அடித்துவந்த 7 பேரடங்கிய இந்த திருட்டுக் கும்பலில் மூன்று பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 7 பேரும் 25 முதல் 38 வயதுக்குட்பட்டவர்களாவர்.
மெல்பேர்ன் நகரின் மத்தியில் ரயில் - ட்ராம் வண்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் பெரிய வணிக வளாகங்களில் ஒன்றுகூடும் மக்களிடம் இவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
இந்த திருட்டுக்கும்பலைச் சேர்ந்த நால்வர் கடந்த வியாழக்கிழமை மெர்பேர்னின் - சன்சைன் மற்றும் டர்நெய்ட் பிரதேசங்களில் கைது செய்யப்பட்டனர்.
மிகுதி மூவரும் கடந்த செவ்வாயன்று காலை அல்பியன் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்கள் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 7 பேரும் மெல்பேர்ன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 14 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு இவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இவர்கள் ஏழுபேரையும் தண்டனைக்காலம் முடிவடைந்த பின்னர் சொந்தநாட்டுக்கு திருப்பி அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.