ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நீக்கப்பட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவரான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சித் தலைமையகத்தில் நேற்றிரவு நடைபெற்றது.
இதன்போதே சந்திரிகா அம்மையாளரை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கும் அந்த இடத்துக்கு லசந்த அழகியவண்ணவை நியமிப்பதற்கும் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த வருடம் நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்சவை ஆதரிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்திருந்த நிலையில் அதற்கு சந்திரிகா கடும் எதிர்ப்பை வெளியிட்டு சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கினார். அத்துடன், 'அபி ஶ்ரீலங்கா' (நாம் ஶ்ரீலங்கா) எனும் அமைப்பையும் உருவாக்கினார். இந்த விடயம் உட்பட மேலும் சில காரணிகளை அடிப்படையாகக்கொண்டே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2015இல் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான பின்னரே சந்திரிகாவுக்கு சு.கவில் தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டிருந்தது. எனினும், முரண்பாடுகள் காரணமாக அவர் செயற்பாட்டு அரசியலில் இறங்கவில்லை. தனது சகாக்கள் ஊடாக அத்தனகல தொகுதிக்கான அரசியலை முன்னெடுத்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.