அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் நீடித்து வரும் நிலையில் சமரசப் பேச்சுவார்த்தைக்கும் தாம் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் ஸெரீஃப் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானில் வைத்து ஜேர்மனி பத்திரிகையொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இவ்வாறு கூறியள்ளார்.
ஈரானில் இராணுவ ஜெனரல் காசிம் சுலைமானி படுகொலைக்குப் பின்னர் அமெரிக்காவுக்கும் எமக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
எனினும் அமெரிக்காவுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
யாரும் தங்களது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள மாட்டார்களெனவோ, உண்மையை உணர்ந்து கொள்ளமாட்டார்களெனவோ நான் கருதவில்லை. எனவே, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை நான் மறுக்கவில்லை.
இருந்தாலும், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கினால் மட்டுமே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்ற எங்களது நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் ஸெரீஃப் கூறினார்.
ஈராக்கிலுள்ள ஈரான் படையினரின் நிலைகள் மீது அமெரிக்கா கடந்த மாதம் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாக்தாதிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஏராளமான ஈரான் ஆதரவாளர்கள் கடந்த மாதம் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து ஈராக் - பாக்தாத் விமான நிலையத்தில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானிய இராணுவ ஜெனரல் காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதலுக்குப் பழி வாங்கும் வகையில் ஈராக்கின் அல்-அஸாத் நகரிலுள்ள அமெரிக்க விமானத் தளத்திலும், இர்பில் நகரிலுள்ள அமெரிக்க இராணுவ நிலை மீதும் ஈரான் கடந்த 8-ஆம் திகதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் அமெரிக்காவுடன் சமரசப் பேச்சுவார்த்தைகும் தாம் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் ஸெரீஃப் தெரிவித்துள்ளார்.