"நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணியைத் தோற்கடித்து வெற்றி பெறுவதே எமது இலக்கு. தேர்தலுக்கான புதிய கூட்டணியில் ரணிலையும் அரவணைத்துப் பயணிப்போம்."
- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
"ஜனாதிபதித் தேர்தலில் நாம் தோற்றுவிட்டோம் என்று சரிந்து கிடக்க விரும்பவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டி வெற்றி பெற்று வீறுகொண்டு எழுந்து நிற்கவே விரும்புகின்றோம்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் உள்ளமை உண்மைதான். அதற்காகக் கட்சியை நாசமாக்க நாம் விரும்பவில்லை.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியையும் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளையும் அரவணைத்துக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காகப் புதிய கூட்டணியை அமைக்கத் தீர்மானித்துள்ளோம்.
தேர்தல் வெற்றியே இந்தக் கூட்டணியின் பிரதான நோக்கம். எனவே, இப்போதிருந்தே எமது கரங்களைப் பலப்படுத்தத் தயாராகிவிட்டோம்" - என்றார்.