ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற இருந்த கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 10ஆம் திகதி திங்கட்கிழமை வரை பிற்போடப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாஸ தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி மற்றும் அதன் நிர்வாகப் பதவிகள் குறித்து இறுதி முடிவை எடுக்க இன்று உத்தேசிக்கப்பட்டிருந்தது. அத்துடன் கடந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத சஜித் ஆதரவாளர்கள் இன்று நடைபெற இருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு சில பிரச்சினைகளைப் பேச இருந்தனர். ஆனால், கட்சித் தலைவர் ரணிலால் இறுதி நேரத்தில் இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் மார்ச் முதல் வாரத்தில் கலைக்கப்படவுள்ள நிலையில் அதற்குத் தயாராக உடனடி நடவடிக்கைகளை எடுக்காமல் இவ்வாறு கட்சித் தலைமை இழுத்தடிப்புச் செய்வது குறித்து சஜித் ஆதரவு அணியினர் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் இவ்வாறே இறுதி நேர முடிவுகளுக்கு ரணில் திட்டமிட்டமிட்டிருந்தார் எனவும் சுட்டிக்காட்டினர்.
இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் மத்திய செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுமாயின் தன்னிச்சையாக சில தீர்மானங்களை சஜித் தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி எடுக்கும் என அறியமுடிந்தது.