சீனாவில் கொரோனா வைரஸூக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றுவரும் மருத்துவ பணியாளர்கள் சுமார் 1,716 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்கள் 6 பேர் இதுவரை உயிரழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 1,716 மருத்துவ பணியாளர்களில் 1,102 பேர் வுஹான் நகரை சேர்ந்தவர்கள். 400 பேர் ஹூபேய் மாகாணத்தின் பிற பகுதிகளை சேர்ந்தவர்கள் என சீன தேசிய சுகாதார பிரதி அமைச்சர் ஜெங் யிக்சின் தெரிவித்துள்ளார்.
சீனா முழுவதும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஓய்வின்றி மிகவும் கடினமாக உழைத்து வருகின்றனர். இதனால் அவர்கள் உளவியல் அழுத்தங்களுக்கு ஆட்படுவதுடன், தொற்றுநோய்க்கான ஆபத்தும் அதிகமாக உள்ளது என்று ஜெங் கூறினார்.
செவ்வாய்க்கிழமை வரையான கணக்கெடுப்பின் பிரகாரமே 1,716 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 6 பேர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் போதுமான முக கவசங்கள், பாதுகாப்பு உடைகள் இல்லாமல் பணியாற்றுவதால் அவர்கள் தொற்றுக்கு ஆட்படும் வீதம் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
என்னோடு பணியாற்றும் 16 பேருக்கு கொரோனோ வைரஸ் தாக்கியதற்கான அறிகுறிகள் உள்ளன என வுஹான் நகரில் உள்ள சமுதாய மருத்துவ மையம் ஒன்றில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.