உலகின் மின்னல் வேக வீரரான உஷன் போல்ட்டின் வேகத்தை மிஞ்சியதாக இந்திய கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீனிவாச கௌடா எருமை மாட்டு பந்தயத்தில் வேகமாக ஓடி சாதனை படைத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் வீர விளையாட்டாக நடத்தப்பட்டுவரும் கம்பாலா எனப்படும் எருமை மாட்டு பந்தயத்தில் எருமை மாடுகளை ஓட்டிச் செல்லும் வீரரான ஸ்ரீனிவாச கௌடா என்ற கிராமத்து இளைஞரே இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பந்தைய தூரமான 142.50 மீட்டர் தூரத்தை 13.62 வினாடிகளில் கடந்து அதிவேகமான அடைவாக சாதனை படைத்துள்ளார் கௌடா. 28 வயதான கௌடா இரட்டை எருமை மாடுகளை விரட்டியவாறு பந்தைய தூரத்தை கடந்த நேரத்தையும் உலகின் அதிவேக வீரர் உஷன் போல்ட்டின் அடைவையும் ஒப்பிட்டே இச்சாதனை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இரண்டும் இருவேறு களங்களில் நிகழ்த்தப்பட்டதாயினும் உஷன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்துள்ளார். கௌடா 142.5 மீட்டர் தூரத்தை ஓடிய 13.62 வினாடிகளை 100 மீட்டருக்கு கணக்கிட்டபோது 9.55 வினாடிகளாக கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்தே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கிராமத்து இளைஞரது இச்சாதனை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கௌடாவிற்கு பல தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வரும் ஒலிம்பிக் போட்டியில் கௌடாவை இந்திய சார்பில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க வைக்க வேண்டும் என்ற குரல்கள் எழத்தொடங்கியுள்மை குறிப்பிடத்தக்கது.