"உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய பிரதான நபரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணியின் தவிசாளராக எந்த அடிப்படையில் நியமிக்க முடியும்? இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ராஜபக்ச அணியின் இந்தச் செயற்பாடு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணையில் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை - நம்பிக்கையைச் சிதைத்துள்ளது."
- இவ்வாறு விசனம் தெரிவித்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆணைக்குழுவொன்றை நியமித்தபோது நான் அதற்கு நன்றி தெரிவித்திருந்தேன், ஆனால், அதனைத் தற்போது மீளப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றேன்.
நாட்டு மக்கள் அனைவருமே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தனர். இதன் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலின்போது மக்கள் கோட்டாபயவை வெற்றியடையச் செய்திருந்தனர்.
ஆட்சிக்கு வந்த உடனே தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய நியமித்திருந்தாலும், அந்த குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பில் மக்கள் தற்போது நம்பிக்கையிழந்துள்ளனர்.
இவர்களின் கூட்டணியின் தவிசாளராக மைத்திரியை அறிவித்ததை அடுத்து இந்த விவகாரம் தொடர்பில் இருந்த குறைந்தபட்ச நம்பிக்கையும் இல்லாமல் போயுள்ளது" - என்றார்.