சுற்றுலா மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இலங்கை லெவன் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் பயிற்சிப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 282 ஓட்டங்களை பெற்றது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஹோப் மற்றும் கிங் ஆகிய இருவரும் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்த நிலையில் ஆரம்பத்திலேயே மேற்கிந்தியத் தீவுகள் அணி தடுமாறிய போது டெரன் பிராவோ-அம்ரிஸ் இணைந்து சரிவில் இருந்து மீட்டனர்.
சிறப்பாக விளையாடிய டெரன் பிராவோ 88 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 100 ஓட்டங்களை பெற்று வெளியேறினார். அம்ரிஸ் மற்றும் பூரன் ஆகியோர் தலா 41 ஓட்டங்களை பெற்றிருந்தனர். அந்த அடிப்படையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 282 ஓட்டங்களை பெற்றது.
பந்து வீச்சில் மதுஷங்க 3 விக்கெட்டுக்களையும் அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக கைப்பற்றியிருந்தனர்.
283 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை லெவன் அணிக்கும் ஆரம்பம் அதிர்ச்சி காத்திருந்தது. ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான வீரக்கொடி மற்றும் நிசங்க ஆகியோர் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்திருந்தனர்.
மற்றொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய உப்பில் தரங்க மற்றும் குணரத்னே ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டனர். இருவரும் இணைந்து சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 199 ஓட்டங்களை பெற்றிருந்த போது உப்புல் தரங்க 120 ஓட்டங்களைப் பெற்றும், 211 ஓட்டங்களாக இருக்கையில் குணரத்னே 64 ஒட்டங்களை பெற்று ஆட்டமிழந்து வெளியேறியிருந்தனர்.
பின்வரிசை வீரர்களின் பொறுப்பான ஆட்டத்தினால் 47.3 ஓவர்களில் எட்டு விக்கெட்டை இழந்து 283 ஓட்டங்களை பெற்று 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றிருந்தது இலங்கை லெவன் அணி.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 22 ம் திகதி பகல் ஆட்டமாக கொழும்பில் நடைறெவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: