உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு மேற்கொண்ட விசாரணை குறித்து திருப்தியடைய முடியாதென கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
தற்போது விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் பொதுமக்களுக்கும் திறக்கப்படவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் விசாரணை நடத்த பல குழுக்கள் நியமிக்கப்பட்டன. உரிய விசாரணைகள் இடம்பெறவில்லையென்பது வெளியிடப்பட்ட அறிக்கை மூலம் புலப்படுகிறது. சில அறிக்கைகள் மூலம் உண்மை சம்பவத்தை மூடி மறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க கூடும். உயர் அதிகாரிகள் உண்மையை மூடி மறைக்க மேற்கொண்ட முயற்சிகள் எமது செவிகளுக்கு எட்டியது.
அரசியல் இலாபத்திற்காக குறித்த விடயம் பயன்பட்டிருக்க கூடும். இதனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் தற்போதய அரசாங்கமும் நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் தகவல்கள் பொதுமக்களுக்கும் பகிரப்படவேண்டுமெனவும் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணையில் அனைத்து தரப்பினரும் சாட்சியளிக்கவில்லை. இதனால் தெரிவுக்குழு செயற்பாடு ஒருதலைபட்சமானதென கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டனை தெரிவித்துள்ளார்.