நீதிமன்ற தடையை மீறி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 20ஆயிரம் பேர் மீது தமிழ்நாட்டு காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தடையை மீறி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு இஸ்லாமியர்கள் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.
இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த இப்போராட்டத்தில் 23முஸ்லீம் இயக்கங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் திரண்டு, தமிழ்நாடு அரசே நிறைவேற்று நிறைவேற்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்று என கோசமிட்டிருந்தனர். நேற்று மாலை வரை தொடர்ந்த இப்போராட்டத்தில் பங்கேற்றமைக்காக 20 ஆயிரம் பேர் மீது சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2012 ம் ஆண்டு அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டு இஸ்லாமிய கூட்டமைப்பினர் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து முன்னெடுத்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டிருந்த நிலையில் நேற்றைய போராட்டத்திலும் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெறாதிருப்பதை உறுதிசெய்வதற்காக இரு கூடுதல் காவல் ஆணையாளர்கள், 4 இணை ஆணையர்கள், 10 துணை ஆணையர்கள், 28 உதவி ஆணையர்கள் மற்றும் 82 காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான சுமார் 10 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டிருந்தது.
இதுதவிர 100 கண்காணிப்பு கமராக்கள், 5 ஆளில்லாத கண்காணிப்பு கமராக்கள் என்பனவும் பயன்படுத்தப்பட்டு தீவிரமான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.