அமெரிக்காவின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் கொலம்பியா தலைமை நீதிபதியாக தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட அமெரிக்க-இந்தியராக ஸ்ரீ ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக 2013-இல் பதவியேற்ற ஸ்ரீ ஸ்ரீநிவாசன் தற்போது அதன் தலைமை நீதிபதியாக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.
52 வயதான ஸ்ரீ ஸ்ரீநிவாசன் தமிழகத்தின் திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவராவார்.
இந்தப் பதவிக்கு, தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, இந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் அமெரிக்க-இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவால், கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஸ்ரீ ஸ்ரீநிவாசன் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்டவராவார்.