உலகத் திருக்குறள் இரண்டாவது மாநாடு -2020 பன்னாட்டுக் கருத்தரங்கம் நாளை முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று தினங்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் பல நாடுகளிலிருந்தும் வருகை தந்துள்ள பல்வேறு தரப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அதே போன்று இங்குள்ள அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்றை இந்தியாவின் தஞ்சாவூர் தமிழ்த் தாய் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் கவிஞர் உடையார்கோவில் குணா யாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடாத்தியிருந்தார்.
இதன் போது அவர் தெரிவித்ததாவது,
தஞ்சாவூர் அறக்கட்டளை சார்பாக பல்வேறு தமிழ் இலக்கியப் பணிகளை உலகளாவிய ரீதியில் மேற்கொண்டு வருகிறோம். அந்த அடிப்படையில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென ஆர்ப்பாட்டங்களையும் மாநாடுகளையும் கருத்தரங்குகளையும் நடாத்தியிருக்கின்றோம்.
மாடத்தீவு, அந்தமான், கொல்கத்தா, மலோசியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மாநாடுகள் - கருத்தரங்குகளை நடாத்தி வந்த நாங்கள் கடந்த வருடம் உலகத் தாய்மொழி தனித்தை முன்னிட்டு மலேசியாவில் உள்ள மலேசிய பல்கலைக்கழகத்தில் உலகத் திருக்குறள் முதலாவது மாநாட்டை நடாத்தியிருந்தோம்.
அதனைத் தொடர்ந்து புலம் பெயர் தமிழர்கள் மட்டுமல்லாமல் யாழ்ப்பாண மண்ணிலே வாழக்கூடிய உணர்வுமிக்க தமிழ் அறிஞர்களும் தமிழ் மக்களும் கலந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் இரண்டாவது உலகத் திருக்குறள் மாநாட்டை நாளை வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடாத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.
அதன் பின்னர் முதலாவது திருவள்ளுவர் சிலையை மாநாட்டின் ஆரம்ப நாளன்று உரும்பிராய் பொது வீதியில் நிறுவுவதற்காக அன்பளிப்பாக வழங்க இருக்கின்றோம். இதனை யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் பாலச்சந்திரன் நிறுவி வைக்க இருக்கின்றார். அதேபோல இரண்டாவது திருவள்ளுவர் சிலையை மாநாட்டின் நிறைவில் அம்பாறை மாவட்டம் காரைதீவுப் பிரதேசத்தில் நிறுவ இருக்கின்றோம். இதனை வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் நிறுவி வைக்க இருக்கின்றார். என அவர் மேலும் தெரிவித்தார்.