கிழக்கில் 4 கட்சிகள் இணைந்து தமிழர் ஜக்கி முன்னணி என்ற கட்சி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் சின்னமாக உதயசூரின் சின்னம் தெரிவு செய்யப்பட்டுள்ளது என கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி.சிவநாதன் தெரிவித்தார்
மட்டக்களப்பு, ஏரன்ஸ் வீதியில் அமைந்துள்ள கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைமைகாரியலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வி. ஆனந்த சங்கரி, இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி கட்சி தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான நா.கணேசமூர்த்தி ஆகியேர் கலந்து கொண்டனர்.
இதன் போது கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி.சிவநாதன் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு தமிழர் ஒன்றியம் நீண்ட காலமாக கிழக்கில் .அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற முயற்சியை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பித்து இன்று சிவராத்திரி தினத்தில் வெற்றி கண்டுள்ளது.
கிழக்கு தமிழர் ஒன்றிய தலைமைக்காரியாலயத்தில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில், எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல்களில் போட்டியிடுவதற்கான கலந்துரையாடல் சுமுகமான முறையில் இடம்பெற்றது.
இதில் தமிழர் ஜக்கிய முன்னணி என்ற பெயர் கொண்ட கூட்டணி அமைக்கப்பட்டு இதன் சின்னமாக உதயசூரியன் தெரிவுசெய்யப்பட்டது.
தற்போது 4 கட்சிகளான வீ.ஆனந்தசங்கரியை தலைவராகக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனை தலைவராக கொண்ட முற்போக்கு தமிழர் அமைப்பு, முன்னாள் பிரதி அமைச்சாரன நா.கணேசமூர்தியை தலைவராக கொண்ட இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி, சிரேஷ்ட சட்டத்தரணி ரி.சிவநாதன் தலைமையிலான கிழக்கு தமிழர் ஒன்றியம் ஆகிய 4 கட்சிகள் இன்று இணைந்து தமிழர் ஜக்கி முன்னணி என கட்சியை உருவாக்கின.
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கிழக்கு தமிழர் ஒன்றியம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. அவர்கள் எங்கள் கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்தனர். கள நிலை யதார்த்த நிலையை உணர்ந்து எமது முயற்சி நன்று என்றனர். ஆனால் வீட்டு சின்னத்தை விட்டு எமது சின்னத்தில் வருவது பிரச்சனை என அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் கிழக்கு மாகாணத்தின் கள நிலையை கருத்தில் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை விடுத்து ஏனைய தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் சேர்ந்து போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டது.
ஏனைய தமிழ் கட்சிகளை வந்து இணையுமாறு அழைப்பு விடுகின்றோம்.
அதேவேளை கருணா அம்மானின் தமிழ் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியும் எம்முடன் சேர்ந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் எதிர்வரும் நாட்களில் உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.