அவுஸ்ரேலியாவில் ஆரம்பமாகியுள்ள மகளிர் ரீ-20 உலகக் கிண்ண தொடரின் முதலாவது போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்ரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற முதலாவது போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலியா களத்தடுப்பை தேர்வு செய்திருந்தது. இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றது.
இந்திய மகளிர் அணி சார்பில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஷபாலி வர்மா அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 29 ஓட்டங்களையும், ரொட்சிஹியூஸ்-26 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்திருந்தனர். தீப்தி சர்மா ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்வுக்கு காரணமாக இருந்தனர்.
பந்துவீச்சில் ஜோனாஸ்சென் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
133 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலி மகளிர் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது இந்திய மகளிர் அணி. இந்திய வீராங்கனைகளின் அபார பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 115 ஓட்டங்களுக்குள் சகலவிக்கெட்டுக்களையும் இழந்து 17 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது அவுஸ்ரேலிய மகளிர் அணி.
இந்திய அணியின் பூனம் யாதவ் 4 ஓவர்கள் பந்து வீசி 19 ஓட்டங்களை மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுக்களையும், பாண்டேய் 3.5 ஓவர்கள் பந்துவீச் 14 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: