புலம்பெயர் அமைப்புக்கள் சதி என்கிறார் அட்மிரல் சரத் வீரசேகர
"ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானத்திலிருந்து அரசு விலகும் முடிவைத் தொடர்ந்து, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தும் நடவடிக்கைகளை புலம்பெயர் அமைப்புக்கள் மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன."
- இவ்வாறு இராணுவத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
"இலங்கையின் உள்ளக விவகாரத்தை நல்லாட்சி அரசு தங்களின் அரசியல் தேவைகளுக்காக சர்வதேசத்தின் மட்டத்துக்குக் கொண்டு சென்றது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பங்களிப்பை வழங்கியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு கடந்த அரசால் எதிர்க்கட்சியாக இருந்து செயற்படவில்லை. மாறாக புலம்பெயர் அமைப்புக்களின் நோக்கங்களை சர்வதேச டுகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றிக்கொள்ளவே முயற்சித்தார்கள்.
ஐ.நா. தீர்மானத்திலிருந்து அரசு விலகும் முடிவைத் தொடர்ந்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் நடவடிக்கைகளைப் புலம்பெயர் அமைப்புக்கள் மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நோக்கிலேயே காணாமல்போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது.
காணாமல்போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் அனைத்தும் ஆரம்பத்தில் இருந்து ஒரு தரப்பினருக்குச் சாதகமானது என்பதைக் குறிப்பிட்டோம். ஆகவே, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு விட்டன" - என்றார்.