வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த இரவு கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிப்பயணித்த அரச பயணிகள் பேருந்தும் எதிர் திசையில் பயணித்த சிறிய ரக வானும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து நிகழ்ந்தது.
சம்பவத்தில் ஐவர் உயிரிழந்திருந்தனர்.
உயிரிழந்தவர்களில் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் அவர்கள் பயணித்த வானை செலுத்திச் சென்ற நபரும் உயிரிழந்திருந்தமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.
காரைநகரைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வர வர்த்தகரான பார் சோமர் என்று அழைக்கப்படும் இராமலிங்கம் சோமசுந்தரம் (வயது 83) அவருடைய மகள் தேவராஜா சுகந்தினி (வயது 51), மருமகன் ஆறுமுகம் தேவராஜா (வயது 62), பேரன் தேவராஜா சுதர்சன் (வயது 30) மற்றும் சாரதியான விஜயகுமார் ரொசாந்தன் (வயது 24)ஆகியவர்களே உயிரிழந்துள்ளனர்.
வர்த்தகரின் இன்னொரு மகளான சோமசுந்தரம் லக்சனா (வயது 29) காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வர்த்தகர் கொழும்பு - யாழ்ப்பாணத்தில் பல தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருபவர் என்று காரைநகர் மக்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்துச் சம்பவத்தினை அடுத்து பேருந்துக்கு வைக்கப்பட்ட தீ வானுக்கும் பற்றிக்கொண்டதால் அதில் காயமடைந்த நிலையில் காணப்பட்ட சாரதி மீட்க முடியாத நிலையில் தீயில் எரிந்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதேவேளை பேருந்துக்கு தீ வைத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.