இரட்டை பனி எரிமலை வெடிப்பின் அரிய காட்சிகள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது. மிசிக்கன் ஏரிக்கரை பகுதியில் நடைபெற்ற இவ் அரிய காட்சியை வானிலை ஆய்வாளர் கோர்ட் ஸ்போல்டன் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
மிசிக்கன் ஏரியின் சவ்கடக்கில் உள்ள ஓவல் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பணியில் ஈடுபட்டிருந்த போதே இக்காட்சியை கண்டு பரவசமடைந்துள்ளார் கோர்ட் ஸ்போல்டன். கிராண்ட் ரோபிட்ஸ் வானிலை சேவையுடன் பணியாற்றி வரும் இவர் இக்காட்சியை பதிவுசெய்து வெளியிட்டுள்ளார்.
குளிர் பிரதேசங்களில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் பனித்திட்டுகள் இருப்பது வழக்கம். அவை கடல் நீரில் மிதக்கும் நிலையில் காணப்படும். அப்போது வேகமாக வரும் அலைகள் பனிப்படலத்திற்கு கீழாக சென்று முடிவிடத்தில் மேல்நோக்கி தள்ளப்படும்.
இந்நிகழ்வு ஏற்படும் இடங்களில் கூம்பு வடிவில் பனிப்படலம் மேல்நோக்கி உருவாகி எரிமலையின் தோற்றத்தில் காட்சி தருவதால் பனி எரிமலை என சொல்லப்படுகிறது.
இவ்வாறான பனி எரிமலைகள் வெடித்து சிதறுவது போன்ற தோற்றத்தை குறித்த பனிப்படலத்தின் கீழ் நகரும் அலைகளின் வேகமான மோதல் ஏற்படுத்திவிடுகிறது. இவ் அரிய காட்சியே இவ்வாறு படம் பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.