"நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு ஜனாதிபதியால் கலைக்கப்படாலாம். எனவே, நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ராஜபக்ச அரசைப் படுதோல்வியடையச் செய்ய நாட்டிலுள்ள சிங்களம், தமிழ், முஸ்லிம் என மூவின மக்களும் அணிதிரவேண்டும்."
- இவ்வாறு அறைகூவல் விடுத்துள்ளார் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
"கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்த ராஜபக்ச அரசு நாட்டை நாசமாக்கும் நடவடிக்கைகளில்தான் ஈடுபட்டு வருகின்றது.
இடைக்கால வரவு - செலவுத் திட்டத்தைக்கூட நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வக்கற்ற இந்த அரசு, வரிகளைக் குறைக்கின்றோம் என்று கூறிவிட்டு பொருட்களின் விலைகளை உயர்த்தி அப்பாவி மக்களின் வயிற்றில் அடித்துள்ளது.
அதேவேளை, இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானங்களின் இணை அனுசரணையிலிருந்து விலகி சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு இருந்த மரியாதையையும் இந்த அரசு இல்லாமலாக்கிச் செய்துவிட்டது. பாரதூரமான விளைவுகளை எமது நாடு சந்திப்பதற்கு இந்த அரசு களம் அமைத்துக் கொடுத்துள்ளது.
மீண்டும் குடும்ப ஆட்சி நடத்தும் இந்த அரசை பொதுத்தேர்தலில் வெல்ல வைத்தால் இங்கு காட்டாட்சிதான் நிலவும்.
எனவே, ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச அரசைப் படுதோல்வியடையச் செய்யும் விதத்தில் மூவின மக்களும் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும்" - என்றார்.