கடந்த காலங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பலம் பெற்றிருந்ததோ அத்தகைய பலம் தொடர்ந்தும் இருப்பதன் மூலம்தான் எங்களது விடுதலையை நாங்கள் அடையமுடியும்.
இவ்வாறு தெரிவித்தார் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா.
யாழ்ப்பாணம், நாவாந்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஆட்சிக் காலத்தில் நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டோம்.
ஆனால் தமிழ் மக்களுக்கு எல்லாம் கிடைக்கப்போகிறன்றது என்ற அற்ப நோக்கத்திற்காக அரசியல் சூழ்ச்சி செய்து நாம் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளை இல்லாது செய்துவிட்டார்கள். இதனால்தான் இன்று நாங்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றோம்.
தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒருமித்து செயற்படுவதன் மூலம்தான் எமக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.
தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ள கோட்டாபய பெரும்பான்மை மக்களின் விருப்பத்துடன் ஆட்சியில் அமர்ந்துள்ளேன் எனவும் அவர்களுக்காகத்தான் செயற்படப்போகிறேன் என்றும் கருத்துக்களைக் கூறிவருகின்றார்.
அத்துடன் இனப் பிரச்சினையைத் தீர்ப்பது பற்றி சிந்திக்காது அவர்கள் செயலாற்றி வருகின்றார்கள்.
ஜனாதிபதியின் இந்தச் செயற்பாடானது தமிழ் மக்களை இன்னும் ஏமாற்றமடையச் செய்துள்ளது.
இத்தகைய நிலையில் பாராளுமன்றத் தேர்தல் வருகின்றது. இதற்காக எங்களுக்குள்ளேயே பல கூட்டணிகள் உருவாகியுள்ளன.
கடந்த காலங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பலம் பெற்றிருந்ததோ அத்கைய பலம் தொடர்ந்தும் இருப்பதன் மூலம்தான் எங்களது விடுதலையை நாங்கள் அடையமுடியும்.- என்றார்.