கொரோனா வைரஸிலிருந்து அகதிகளை அவுஸ்திரேலிய அரசு பாதுகாக்கத் தவறிவிட்டதாகக் கூறி அங்கு தடுப்புக்காவலில் உள்ள அகதி ஒருவா் சார்பில் அந்நாட்டு உள்த்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் மற்றும் உள்துறை திணைக்களத்தை சட்ட ரீதியான சவாலுக்குட்படுத்தும் வகையில் நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசின் அகதிகள் தொடா்பான கொள்கைகளை சவாலுக்குட்படுத்தும் வகையில் மனித உரிமைகள் சட்ட மையம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
அமைச்சர் டட்டனும் மத்திய அரசும் கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான திட்டங்களை செயற்படுத்தத் தவறியதன் மூலம் அகதிகளைப் பராமரிக்கும் கடமையை மீறுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்துமா, இதய நோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல அடிப்படை உடல்நலப் பிரச்சினைகளை மனுதாரரான அகதி கொண்டுள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுமாயின் கடுமையான பாதிப்புக்கைளை எதிர்கொள்ளவோ அல்லது இறந்து போகவோ கூடிய அபாயம் உள்ளது என மனித உரிமைகள் சட்ட மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
மனுதாரரான அகதியை ஆஸ்திரேலிய அரசாங்கம் 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மனுஸ் தீவிலிருந்து சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு மாற்றியது எனவும் மனித உரிமைகள் சட்ட மையம் குறிப்பிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 1,400 பெண்கள் மற்றும் ஆண்கள் தடுப்புக்காவலில் உள்ளனர். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு பெரும்பாலும் நெரிசலான இடங்களில் உணவு பரிமாறப்படுகிறது
அவா்களில் பலா் ஒரே குளியலறைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆறு பேர் வரை ஒரே அறைகளில் தூங்கவேண்டிய நிலை உள்ளது.
தடுப்பு மையங்கள் கப்பல்கள் போன்றவற்றில் கொரோனா பரவும் ஆபத்து அதிகம் உள்ளது. இந்நிலையில் தடுப்பு மையங்களில் உள்ளவா்களை விடுவிக்குமாறு உலகெங்கும் இருந்து சுகாதார வல்லுநா்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
எனினும் இந்த ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு அவுஸ்திரேலிய அரசாங்கம் தடுப்புக்காவலில் இருப்பவர்களைக் குறைக்கவில்லை.
அமைச்சர் டட்டனின் இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறினால் அகதிகள் தொடா்ந்தும் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி நீதிமன்றங்களை நாட வேண்டியிருக்கும் என மனித உரிமை சட்ட அமைப்புகள் கவலை கொண்டுள்ளன என மனித உரிமைகள் சட்ட மையம் வாதங்களை முன்வைத்துள்ளது.
தடுப்புக்காவலில் அரசாங்கத்தின் பராமரிப்பில் உள்ள அகதிகளைப் பாதுகாக்க வேண்டிய சட்டப்பூர்வ கடமை அவுஸ்திரேலிய உள்த்துறை அமைச்சா் பீட்டர் டட்டனுக்கு உள்ளது என மனித உரிமைகள் சட்ட மைய சட்ட இயக்குனர் டேவிட் பர்க் தெரிவித்துள்ளார்.
அமைச்சா் பீட்டர் டட்டன் முடிவின்படி ஆண்கள் மற்றும் பெண்கள் நெரிசலான தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் சமூக இடைவெளியைப் பேண முடியாத நிலை உள்ளது.
தடுப்புக்காவல் நிலையங்களில் உள்ளவர்கள், குறிப்பாக அடிப்படை சுகாதார பிரச்சினைகள் உள்ளவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகக் கூடிய கடுமையான ஆபத்தில் உள்ளனர் என்பதை மருத்துவ நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்ந சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகளை அகதிகள் விவகாரத்தையும் நடைமுறைப்படுத்துமாறே அரசையும் அமைச்சர் டட்டனையும் கேட்கிறோம்.
தடுப்பு மையங்களில் இருந்து பாதுகாப்பான வீடுகளுக்கு மக்களை மாற்றுவதன் மூலம் அல்லது செல் அனுமதிப்பதன் மூலம் ஆபத்துக்களைத் தவிர்க்க முடியும்.
அகதிகளி்ன் தற்போதைய நிலைமை பாதுகாப்பற்றது என்பதை முன்னணி நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். அரசாங்கம் இதனைப் புரிந்துகொண்டு நடவடிக்கைகளை எடுத்தால் நாங்கள் நீதிமன்றங்களை நாடும் தேவை ஏற்படாது என , அகதிகளுக்கான சட்ட ஆலோசனை சேவை மைய இயக்குநரும் முதன்மை வழக்குரைஞருமான சாரா டேல் தெரிவித்துள்ளார்.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பலர் பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் அடிப்படை சுகாதார பிரச்சினைகளைக் கொண்டுள்ளவா்கள் எனவும் அவா் சுட்டிக்காட்டினார்.
சமூக தூரத்தையும் தனிமைப்படுத்தலையும் கடைப்பிடிக்குமாறு சுகாதார வல்லுநா்கள் அழுத்திச் சொல்லும் இந்த நேரத்தில் அகதிகள் தடுப்புக்காவலில் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்நிலையில் சுகாதார வல்லுநா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றவும் தம்மைப் பாதுகாக்கவும அகதிகளுக்குள்ள உரிமையை அவுஸ்திரேலிய அரசு உறுதி செய்ய வேண்டும்.
பாதுகாப்பு கோரி இங்கு வந்தவர்கள் உட்பட அவுஸ்திரேலியாவில் உள்ள அனைத்து மக்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் மனித உரிமைகள் சட்ட மையம் வலியுறுத்தியுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியா