குடும்பத்தினருடன் தொலைபேசியில் பார்த்து கதைப்பதற்கு அனுமதிக்குமாறு கோரி வேலூர் மத்திய சிறையில் தொடர்ந்து 27 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த முருகன் தன் உண்ணாவிரதத்தை இன்று முடித்துக்கொண்டார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையில் தனிஅறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்ற கைதிகளை போன்று செல்போன் வாட்ஸ்-அப் வீடியோ கோலில் குடும்பத்தினர், உறவினர்களிடம் கதைக்க அனுமதிக்கும்படி முருகன் ஜெயில் நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
அதனால் மனவேதனை அடைந்த முருகன் கடந்த 1-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். யாருடன் பேசாமல் தியான நிலையில் இருக்கும் அவரின் உடல் சோர்வு அடையும்போது குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வந்தது. மேலும் முருகனின் உடல்நிலையை சிறை வளாக மருத்துவர்கள் தினமும் கண்காணித்து வருகிறார்கள். சிறை அதிகாரிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து வந்தார்.
இந்நிலையில் வேலூர் மத்திய சிறையில் தொடர்ந்து 27 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த முருகன், சிறை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்திய பின் இளநீர் குடித்து தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.