திருமண அழைப்பிதழ்களுக்குள் போதைப் பொருட்களை மறைத்துக் கடத்திய குற்றச்சாட்டில் 20 வயதான இந்திய இளைஞா் ஒருவர் அவுஸ்திரேலியா –சிட்னி நகரில் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட திருமண அழைப்பிதழ்களுக்குள் போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த இளைஞனைக் கைதுசெய்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 20-ஆம் திகதி இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட திருமண அழைப்பிதழ்கள் மற்றும் உடைகள் அடங்கிய பொதியைப் பரிசோதித்தபோது அதற்குள் சூடோபிட்ரின் (Pseudoephedrine) என்ற போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விசாரணைகளை ஆரம்பித்திருந்த அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள், நியூ சவுத் வேல்ஸ் பொலிஸாரின் உதவியோடு நேற்று சிட்னி - ஆர்ன்க்ளிஃப், பெக்ஸ்லி, ரெவ்ஸ்பி ஆகிய 3 இடங்களில் சோதனை நடத்தியதுடன் 20 வயது இளைஞர் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர்.
சட்டத்திற்குப் புறம்பாக போதைப்பொருள் கடத்துதல் உட்பட 3 பிரிவுகளில் குறித்த இளைஞர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேற்றையதினம் சதர்லாண்ட் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இந்நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் செப்டம்பர் 14ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேக நபா் குற்றவாளியாக உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் 25 வருட கால சிறைத்தண்டனை மற்றும் ஒன்றரை மில்லியன் டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியா